‘கடவுளை விலக்கி வைத்து விசாரணை’

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்நிறுவனத்திற்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து, அந்த நோட்டீசுக்கு தடைகோரி ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை தந்த நோட்டீஸ் தெளிவின்றி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், நீதிபதி சதீஷ்குமார் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எதனடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? உச்ச நீதிமன்றம் கூறியது போல அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை. நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது?” என தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், “நெய்யை சோதனை செய்த குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னையிலுள்ள கிங்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு நிறுவனம்தான். மத்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகளை ஏன் வெளியிடவில்லை? மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும். பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். உரிய அவகாசத்தில் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்” எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.







