ரஜினிக்கு வெற்றிகரமாக முடிந்தது ஆபரேஷன்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக, மருத்துவமனையில் நேற்றிரவு ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று அதிகாலையில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், ரஜினியின் அடிவயிற்றுப் பகுதியில் ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் நடைபெற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஜினிகாந்த் இப்போது முழு ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் எப்போதுமே மனதளவிலும், உடலளவிலும் சூப்பர் ஸ்டார் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரஜினிகாந்த் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது குடும்பத்தினரிடம் பேசியதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வந்த தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரஜினிகாந்த்துக்கு தொடர்ச்சியாக சில மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை அவர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி, ரசிகர்களிடையே, அவரது உடல் நலன் குறித்து ஏற்பட்ட பயத்தினை போக்கி உள்ளது.







