புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புகள்

புரட்டாசி மாதமே சிறப்பானது என்றாலும், இதில் வரும் அனைத்து சனிக்கிழமைகள் மிக அற்புதமானவை. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.

​புரட்டாசி சனிக்கிழமை 2024 :

இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. இந்த நான்கு சனிக்கிழமைகளுமே மிக முக்கியமான, அதிகம் சிறப்புடையவை ஆகும். புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி வருகிறது. மகா சங்கடஹர சதுர்த்தி மட்டுமல்ல, இந்த நாளில் மகாபரணியும் இணைந்தே வருகிறது. புரட்டாசி 2வது சனிக்கிழமை செப்டம்பர் 28ம் தேதி வருகிறது. இது ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி 3வது சனிக்கிழமை அக்டோபர் மாதம் 5 ம் தேதி வருகிறது. இது நவராத்திரி காலத்துடன் இணைந்து வருகிறது. புரட்டாசி 4வது மற்றும் கடைசி சனிக்கிழமை அக்டோபர் 12ம் தேதி வருகிறது. இது பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரம் மற்றும் விஜயதசமி நாளுடன் இணைந்து வருகிறது.

புரட்டாசி முதல் சனிக்கிழமை :

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபட வேண்டும். சிலர் தளிகையுடன், மாவிளக்கும் சேர்த்து படைத்து வழிபடுவார்கள். பெருமாளுக்கு தளிகை இடும் போது, பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு துளசி மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு டம்ளரில் துளசி தீர்த்தம் வைத்து, பழங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். பெருமாளின் படத்திற்கு முன்பு, சாமியை நோக்கி இருப்பது போது வாழை இலை போட்டு, 5 வகையான சாதங்கள் செய்து படைக்கலாம். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், புளிசாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய சாதங்களை இலையில் அப்படியே வைத்தும் வழிபடலாம். அல்லது அந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் உருவம் அமைத்தும் வழிபடலாம்.

நைவேத்தியமும் வழிபாட்டு முறையும் :

பெருமாளுக்கு நைவேத்தியமாக மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் உளுந்து வடை, சுண்டல், பானகம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மாவிளக்கும் இட்டு படைக்கலாம். 5 வகையான சாதம் செய்யும் வழக்கம் இல்லாதவர்கள், வீட்டில் சாதாரணமாக செய்யும் சாம்பார், கூட்டு, பொரியல், பாயசம் ஆகியவற்றை இலையில் பரிமாறி, அதை பெருமாளுக்கு படைத்து வழிபடலாம். பெருமாளுக்குரிய மந்திரங்கள் எது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். வேறு எந்த மந்திரமும் தெரியா விட்டாலும், ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற உயர்வான மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம்.

​முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாடு :

இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையுடன், மகாபரணியும் இணைந்து வருகிறது. கார்த்திகை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் பரணி நட்சத்திரங்களை மட்டும் தான் மகா பரணி என நாம் சிறப்பித்து சொல்லுவோம். சூரிய பகவான், கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் இருக்கும் போது இந்த ஆண்டு மகாபரணி வருகிறது. இது முன்னோர்களுக்கு மோட்சத்தை வழங்கக் கூடிய அற்புதமான நாளாகும். வாழ்நாளில் இதுவரை முன்னோர் வழிபாட்டை செய்ததே கிடையாது என்பவர்கள் இந்த நாளில் ஒரு கை பிடி அளவு சாதத்துடன் எள் கலந்து காகத்திற்கு வைப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் போது, குலதெய்வம் வீட்டிற்கு வருவதுடன், தெய்வமாக மாறி நம்முடைய குடும்பத்தை காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் இதுவரை விலகி சென்றிருந்தாலும், இந்த நாளில் வழிபட்டால் அவர்களையும் வீட்டிற்கு வரவைத்து, அருள் செய்ய வைக்கும்

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x